Home> Tamil Nadu
Advertisement

ஆளுநர் ரவிக்கு ‘திராவிட’ வகுப்பெடுத்த டி.ஆர்.பாலு!.

TR Balu Condemns Governor Ravi :  சனாதன தர்மம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களைப் பேசி வரும் ஆளுநர் ரவிக்கு, அவரது பாணியிலேயே க்ளாஸ் எடுத்த டி.ஆர்.பாலு.!  

ஆளுநர் ரவிக்கு ‘திராவிட’ வகுப்பெடுத்த டி.ஆர்.பாலு!.

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குறிப்பிட்டுள்ள தகவல்களின் சாராம்சங்களைக் காணலாம்.

1. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன.

மேலும் படிக்க | ‘உங்க சீனியர் என்கிற முறையில் வாழ்த்துகிறேன்’ - மாநிலக் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் ப்ளாஷ்பேக்

2.  'திராவிடர்' என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600 ஆம் ஆண்டு என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னதாக 'திராவிடம்' என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா? அல்லது இல்லை என்று ஆளுநர் அவர்கள் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்? 

3. ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானது என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் அவர்கள் வாசித்தாலே ஆரியர் - திராவிடர் என்ற உண்மையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

 4. மகாபாரதத்தில் 'திராவிடம்' வருகிறது. காஞ்சிபுராணத்தில் 'திராவிடம்' இருக்கிறது. தாயுமானவர் 'திராவிடம்' சொல்கிறார். தஸ்யூக்கள், அடிமைகள், திராவிடர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.இத்தகைய இந்தியச் சமூக வரலாற்றின் சாதாரணச் செய்திகளைக் கூட அறிந்து கொள்ளாமல் ஆங்கிலேயர்கள் வந்து தான் 'திராவிடர்கள்' என்று பிரித்தார்கள் என்று சொல்வது வரலாறு அறியாதவர் கூற்று. அல்லது வரலாற்றை மறைப்பவர்களின் கூற்று ஆகும்.

 5. இன - இட - மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழர் தம் அரசியலை - முன்னேற்றத்தை - எழுச்சியை உருவாக்க முனைந்தது தான் திராவிட இயக்கம் ஆகும். கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருக்கிறது. ஆயிரமாண்டு பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வருகிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதி தான் ஆளுநர் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.

மேலும் படிக்க | நான் சர்வாதிகாரி ஆவேன் - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

6. மன்னர்கள், குறுநில மன்னர்கள், சமஸ்தானங்கள் - என பிரிந்து கிடந்த நிலப்பரப்பை ஒன்றாக்கி 'இந்தியா'வாக ஆண்டது பிரிட்டிஷ் அரசு. இங்கிருந்த சாதி - மத - இன - மொழி - எல்லை வேற்றுமைகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர இந்த வேற்றுமைகள் அனைத்தும் அவர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்வது வரலாற்றை மறைப்பது ஆகும். வேத கால வரலாற்று இலக்கியங்களை ஆளுநர் அவர்கள் வாசித்தாலே இத்தகைய வேற்றுமைகளின் பிதாமகர்கள் யார் என்பதை அவர் உணரலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Read More