Home> Tamil Nadu
Advertisement

தமிழ்நாடு முழுவதும் திரையரங்கு கட்டணங்கள் 25% உயர்வு

தமிழ்நாடு முழுவதும் திரையரங்கு கட்டணங்கள் 25% உயர்வு

தமிழகத்தில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரிகளின் படி தமிழக படங்களுக்கு 10 சதவீதமும் இதர மொழி படங்களுக்கு 20 சதவீதமும் தமிழக அரசு கேளிக்கை வரி விதித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந் தமிழ் திரையுளகினர், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டம் முடிந்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

"தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கனவே ’பைரசி’ முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% ஜிஸ்டி என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27.09.2017 அன்று தமிழ்ப்படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம். இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களையும் மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.

இது சம்பந்தமாக இன்று (அக்டோபர் 3) தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்து இருந்தனர்.

இதன் அடிப்படையில் சினிமா வர்த்தக சபை பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில், சினிமா தொழிலில் உள்ள பல்வேறு சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தன. 

அவர்களின் கோரிக்கையில், பெருநகர சென்னையில் மல்டிபிளக்ஸ் மற்றும் ஏர்கண்டி‌ஷன் தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 160 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும். 

ஏ.சி. வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 120 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். சென்னை தவிர மற்ற பகுதிகளில், மல்டிபிளக்ஸ் மற்றும் ஏர்கண்டி‌ஷன் தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 140 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.

ஏ.சி. இல்லாத தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.100 என்றும் திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர்.

டிக்கெட் கட்டணம் திருத்தம் தொடர்பாக உயர்மட்டக்குழு பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்தது. அந்த பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்து அவற்றை ஏற்றுக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதுள்ள அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ளது. இப்போதுள்ள அனுமதி கட்டணமாக இருக்கும் 7 ரூபாய், 5 ரூபாய், 4 ரூபாய் ஆகியவற்றை 10 ரூபாயாகவும்; 10 ரூபாய் கட்டணம் 15 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தியேட்டர்களின் கட்டணமும் மாற்றி அமைத்து உத்தரவிடப்படுகிறது. மாநகராட்சி பகுதி ஏ.சி. தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 15 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.62.50 ஆகவும் இருக்கும். அங்குள்ள ஏ.சி. வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.37.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் உள்ள ஏ.சி. தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும்; ஏ.சி. இல்லாத தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.37.50 ஆகவும் உயர்த்தப்படுகிறது. நகர பஞ்சாயத்துகளில் உள்ள ஏ.சி. தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.31.25 ஆகவும்; ஏ.சி. இல்லாத தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்துகளில், ஏ.சி. சினிமா தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18.75 ஆகவும்; ஏ.சி. வசதி இல்லாத தியேட்டர்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 15 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் அனைத்து நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.  இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Read More