Home> Tamil Nadu
Advertisement

காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம்: அன்புமணி யோசனை

புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம்: அன்புமணி யோசனை

மின்துறை அமைச்சகத்தை இரண்டாகப் பிரித்து நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தைப் புதிதாக அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித்  திறனில் தமிழ்நாடு மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும்,  வருங்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை,  இன்னும் மின்சாரத்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாகவே செயல்பட்டு வருவது அதன் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்காது.

புவி வெப்பயமாதலின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்களைத் தொடங்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது சாத்தியமில்லை என்றாலும் கூட, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அனல் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதை நிறுத்திக் கொண்டு, அவற்றுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத புதுப்பிக்கவல்ல மின்சார உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற இயற்கை ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தூய்மை மின்சாரம்தான் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகும். புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான திறனில், சற்று பின்னடைவைச் சந்தித்திருந்த தமிழ்நாடு, இப்போது  கர்நாடகத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 

மேலும் படிக்க |  வலியுறுத்திய தேமுதிக... நிறைவேற்றிய திமுக: விஜயகாந்த் பாராட்டு

fallbacks

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறன் 15,914 மெகாவாட் ஆகும். காற்றாலை மின்  உற்பத்தித் திறன் 8,606 மெகாவாட் ஆகவும், சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் 4,986 மெகாவாட் ஆகவும், நீர் மின்னுற்பத்தித் திறன் 2,322 மெகாவாட் ஆகவும் உள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறனில் தமிழகத்திற்கு அடுத்தபடியாக 15,795 மெகாவாட்டுடன் கர்நாடகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

கர்நாடகம் நினைத்தால் எந்த நிமிடமும் தமிழகத்தை மீண்டும் பின்னுக்குத் தள்ள முடியும் என்பதால், முதலிடத்திற்காக இரு மாநிலங்களுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. சூரிய ஒளி மின்னுற்பத்தியைப் பொறுத்தவரை 7738 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனுடன் ராஜஸ்தான்  முதலிடத்தில் உள்ளது. கர்நாடகம் 7,469 மெகாவாட் திறனுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத்  5,708 மெகாவாட் திறனுடன் மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு 4,986 மெகாவாட் திறனுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. 

சூரிய ஒளி மின்னுற்பத்தி திறனை அதிகரிப்பதில் இந்த மாநிலங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அடுத்த இரு ஆண்டுகளில், 2024-25 ஆம் ஆண்டில், சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திறனை 30,000 மெகாவாட்டாக அதிகரிக்க ராஜஸ்தான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மற்றொரு புறம் குஜராத் மாநில அரசு கட்ச் குடா பகுதியில், 726 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பாலைவனப் பகுதியில், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் 30,000 மெகாவாட் திறன் கொண்ட கலப்பு மின்னுற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 

இதன் மூலம் 2024-ஆம் ஆண்டில் 15,000 மெகா வாட்டும், 2026-ஆம் ஆண்டில் 30,000 மெகாவாட்டும் புதுப்பிக்கவல்ல மின்சாரம் கிடைக்கும். மராட்டியம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளன. இவை அனைத்தும் இமாலயத் திட்டங்கள். இவை செயல்படுத்தி முடிக்கப்படும் போது அம்மாநிலங்களில் அனல் மின்னுற்பத்தியின் தேவை குறைந்துவிடும். அது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெரிதும் உதவும்.

புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டங்களில் இந்த மாநிலங்களுடன் போட்டியிட வேண்டுமானால், அதற்காக தமிழ்நாடு அரசு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 2030-ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு குறைந்து ஒரு லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் தேவை. இவற்றை அடையாளம் கண்டு, சூரிய ஒளி மின்திட்டத்தைச் செயல்படுத்துவது மிகவும் சவாலான பணி ஆகும். அவ்வாறு செயல்படுத்தினாலும் கூட ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை நெருங்க முடியாது.

மேலும் படிக்க |  ’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த டி.ஆர்.பி ராஜா

fallbacks

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பயன்படாத பாலைவனங்கள் உள்ளன. அவற்றில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்திட்டங்களை ஒரே இடத்தில் செயல்படுத்தலாம். இது தவிர தரிசு நிலங்களும் அங்கு ஏராளமாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் சூரிய ஒளி உற்பத்திக்குத் தேவையான நிலங்கள் இல்லை. இத்தகைய சூழலில் புதுமையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியில் மற்ற மாநிலங்களுடன் தமிழ்நாட்டால் போட்டி போட முடியும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதல் கட்டமாக தலா ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்தைச் செயல்படுத்தலாம். அதன்மூலம் குறைந்தது 12,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனை அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படுத்த முடியும். இதைக் கொண்டு அந்த ஊராட்சிக்குத் தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இத்தகைய புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தான் மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும். சூரிய ஒளி மின்சார உற்பத்திச் செலவு மிகவும் குறைவு என்பதால், மின்வாரியமும் இழப்பைக் குறைத்து லாபத்தில் இயங்க முடியும். ஆனால், இவற்றையெல்லாம் இப்போதுள்ள மின்சார அமைச்சகக் கட்டமைப்பில் செய்ய முடியாது. மின்வெட்டைத் தவிர்க்கவும், மின்வாரியத்திற்கு கடன் பெறவுமே போராட வேண்டியுள்ள நிலையில், சவாலான இந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியாது.

எனவே, மின்துறை அமைச்சகத்தை இரண்டாகப் பிரித்து நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தைப் புதிதாக அமைக்க வேண்டும். மத்திய அரசும், பல மாநிலங்களும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியில் பிடித்துள்ள முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் இனி நம்பரை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்பலாம் - புதிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Read More