Home> Tamil Nadu
Advertisement

ஆர்கேநகர் இடைத்தேர்தல்:பிரச்சாரத்தை தொடங்கிய ஜெ., அண்ணன் மகள் தீபா

ஆர்கேநகர் இடைத்தேர்தல்:பிரச்சாரத்தை தொடங்கிய ஜெ., அண்ணன் மகள் தீபா

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ளார். 

ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி, ஓபிஸ் அணி, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சியும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை போன்றவை இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

மொத்தம் இந்த தொகுதியில் 62 வேட்பாளர்கள் உள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபா தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். 

தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் மீனவர்கள் அதிகம் இருப்பதால் ஒருசில இடங்களில் படகில் சென்று ஓட்டு கேட்க தீபா தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவின் பிரச்சாரத்திற்காக சிறப்பு வேன் ஒன்று தயாராகி வருகிறதாம். அந்த வேனும் படகு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். விரைவில் படகு வேனில் வந்து தீபா பிரச்சாரம் செய்து ஆர்.கே. நகர் வாக்குகளை அள்ளத் திட்டமிட்டுள்ளாராம்.

நேற்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தீபா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read More