Home> Tamil Nadu
Advertisement

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீருங்கள் - அதிமுக முன்னாள் எம்பி கோரிக்கை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீருங்கள் - அதிமுக முன்னாள் எம்பி கோரிக்கை!

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவான். ஜெயலலிதா மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது,"

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களைப் பொறுத்தவரை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இதயதெய்வம் மட்டுமல்ல குலதெய்வமாக பூஜிக்கப்படுகிறார். நானெல்லாம் அம்மா அவர்களின் நிழலில் மட்டுமே வளர்ந்தவன். 2016 செப்டம்பர் 22 ம் தேதி உடல்நலம் குன்றி அம்மா அப்ப ல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது விரைவில் தேறி விடுவார் என்று தான் நம்பினோம். ஆனால் டிசம்பர் 5 ம் தேதி அம்மா அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சி அளித்தது.    2017 பிப்ரவரி 7 ம் தேதி அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்கிய போது அம்மா அவர்களின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்பது முக்கிய முழக்கமாக இருந்தது.  2017 பிப்ரவரி மாதம் என் தலைமையில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்களை நேரில் சந்தித்து அம்மா அவர்கள் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.

2017 ஆகஸ்டில் அணிகள் இணைந்த போது அம்மா அவர்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது.  அதையடுத்து 2017 செப்டம்பர்25 ம் தேதி நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 90% விசாரணை முடிவுற்ற நிலையில் , 2019 ஏப்ரலில் அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்திற்கு எதிராக தடையாணை பெற்றது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தடை காரணமாக எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கில் அரசுப்பணம் செலவிடப்பட்டது தான் மிச்சம்.

ALSO READ அண்ணாமலைக்கு எதிராக காட்டமான அறிக்கை வெளியிட்ட ஜோதிமணி எம்பி

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 21 ல் வரிசை எண் 22 ல் " அம்மா அவர்களின் இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து, கழக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு , கடந்த ஜூலை மாதம் 27 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையினை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிகிறேன். அம்மா அவர்கள் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அஇஅதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு  நிம்மதிப் பெருமூச்சும் விடுவான்.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்யவும், அதன் மூலம் மாண்புமிகு அம்மா அவர்களின் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  இன்றிலிருந்து சரியாக 100 நாட்களில் அம்மா அவர்களின் 5 ம் ஆண்டு நினைவுநாள் வருகிறது.அதற்குள் முதலமைச்சர் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More