Home> Tamil Nadu
Advertisement

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 75 விழுக்காடு தமிழர்களை நியமனம் செய்ய வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆந்திரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ளூர் மக்களை 75 விழுக்காடு பணியில் அமர்த்த தனியார் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றியிருக்கிற நிலையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் 'நவரத்னா' நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த 299 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல்வேறு தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் இருக்கின்ற இந்த மண்ணில், திறமையின் பிறப்பிடமாக விளங்கும் இந்த தமிழ் மண்ணில், பொறியியல் பட்டம் பெற்ற திறமையான தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டை முற்றிலுமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் புறக்கணித்து இருப்பது நியாயமற்ற செயல்.

மேலும் படிக்க | உண்மை காதலை நிரூபிக்க தன்பெயரை மார்பில் பச்சை குத்த சொல்லி காதலியை கட்டாயப்படுத்திய இளைஞன் கைது

தமிழகத்தில் அமைந்து உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒரு பொறியாளர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லாதது குறித்து உரத்த குரல் எழுப்பாதது வேதனை அளிக்கிறது. 

இதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்த 75 விழுக்காடு பொறியாளர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர்களாக நியமிக்கப்படத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மக்களிடம் கோரிக்கை வைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More