தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பினை வழங்கிட குறு - சிறு - நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய கேந்திரங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், கோவை, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்று அடுத்தடுத்து சோதனைகளைச் சந்தித்து, தற்போது கொரோனா நோய் பேரிடரைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக முற்றிலும் நிலை குலைந்து நிற்கின்றன.
இந்நிலையில், இன்றைய தினம் (4.5.2020) மாநிலம் முழுவதும் உள்ள இந்தத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கூட்டமைப்புத் தலைவர்கள், மற்றும் பிரதிநிதிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி - அவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் குறித்தும் - பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தேன்.
இந்த நிறுவனங்களின் சார்பாகப் பங்கேற்ற ஒவ்வொரு பிரதிநிதியும் எடுத்து வைத்த கருத்துகள், ஆலோசனைகள், கோரிக்கைகள் மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்க்கு நேரடியாகவும், அதற்கு மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும், வேலை வாய்ப்பையும் - வாழ்வாதாரத்தையும் வழங்கும் இந்தத் துறை தற்போது எத்தகையை பேரிடரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் “ஊரடங்கு” என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு - தொழில்களைத் தொடங்கிடவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை மீண்டும் தொய்வின்றி வழங்கிடவும் - மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக முன்னெப்போதும் போல் விளங்கிடவும், பின்வரும் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதியும் - ஊரடங்கு தளர்வுகளினால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொய்வின்றிச் செயல்பட்டிடவும் எவ்விதத் தயக்கமும் தாமதமுமின்றி இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்தையும் - பொருளாதார வளர்ச்சியையும் தற்போதுள்ள “தேக்கநிலைமை”யிலிருந்து உடனடியாக மீட்டிட வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
அதுமட்டுமின்றி, கொரோனா நோயிலிருந்து ஊழியர்களையும், தொழிலாளர்களையும் “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்” மூலம் பாதுகாத்து, தங்கள் தொழிலையும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் தவறாது நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.