இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
அதன்படி தற்போது நடைப்பெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 0(6), சிகர் தவான் 21(29) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கோலி நிதானமாக விளையாடி 116(120) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக விஜய் சங்கர் 46(41) ரன்கள் குவித்தார். எனினும் இவருக்கு பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் காரணமாக இந்தியா 48.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 250 ரன்கள் குவித்தது.
What a nail biting game this has been.
— BCCI (@BCCI) March 5, 2019
Two wickets for @vijayshankar260 in the final over and #TeamIndia win the 2nd ODI by 8 runs #INDvAUS. We take a 2-0 lead in the five match series pic.twitter.com/VZ3dYMXYNh
இதனையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரோன் பின்ச் 37(53), உஷ்மான் கௌவாஜா 38(37) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய பீட்டர் ஹான்ஸ்கோம்ப் 48(59), மார்க்கஸ் ஸ்டோனிக்ஸ் 52(65) என அடுத்தடுத்து வெளியேறினர். இதன் காரணமாக ஆட்டத்தின் 49.3-வது பந்தில் 242 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்த இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட், விஜய் சங்கர், பூம்ரா தலா 2 விக்கெட் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இப்போட்டியின் வெற்றியின் மூலம் 5 ஒருநாள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 8-ஆம் நாள் ரான்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.