Home> Movies
Advertisement

சூர்யாவுக்கு ஆதரவு இல்லை: கமுக்கமாக இருக்கும் சக நடிகர்கள்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

சூர்யாவுக்கு ஆதரவு இல்லை: கமுக்கமாக இருக்கும் சக நடிகர்கள்

தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய்பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜெய்பீம் (Jai bhim) திரைப்படம் சிறப்பாக இருந்தது. பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்கூறும் படமாக ஜெய்பீம் இருந்தது.

ALSO READ ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது! 

இதற்கிடையில் இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல் குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தததை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு (Actor Suriya) பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகள் கேட்டு அறிக்கை வெளியிட்டதுடன் அதில் அவரது தியேட்டர்களில் படம் திரையிடுவதை வன்னிய சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தும் சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அறிக்கைக்கு சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஜெய்பீம் பட விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனால் தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை திரைத்துறை சார்பில் யாரும் ஆதரவாக குரல் கொடுத்தது போலத் தெரியவில்லை. குறிப்பாக நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது. மறுப்புறம் சூர்யாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மட்டுமே இதுவரை பேசி வருகின்றன. 

இதற்கிடையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பேராசிரியர் அருணன் ஒரு ட்விட் பதிவிட்டு உள்ளார். அதன்படி அதில், நடிகரும் தயாரிப்பாளருமான சூரியாவை அடித்தால் ரூ ஒருலட்சம் என்று ஒரு கோஷ்டி அறிவிக்கிறது. ஓடிய அவரது படத்தை தடுத்துநிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்கின்றன? சூப்பர் ஸ்டார்கள் உலகநாயகன்கள் தலைகள் தளபதிகள் எங்கே? இன்று சூரியாவுக்கு நாளை இவர்களுக்கு! என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

முன்னதாக ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக  தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மபடம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதன்படி அந்த நோட்டீஸில், ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்படி கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ உண்மையை திரையில் பேச திராணி வேண்டும் கொதிக்கும் மோகன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More