Home> India
Advertisement

சபரிமலை தரிசனத்துக்கு இவர்களுக்கு முன்பதிவு தேவை இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

சபரிமலை தரிசனத்துக்கு இவர்களுக்கு முன்பதிவு தேவை இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு வரும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “கேரளாவில் பலத்த மழை பெய்து வந்ததால், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கட்டமாக தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

தேவஸ்தானம் ஏற்கனவே 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தேவை இல்லை என தற்போது தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. 

வழக்கமாக ஆன்லைன் முன்பதிவிற்கு ஆதார் நகல், பாஸ்போர்ட் நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு பள்ளி, கல்லூரி அடையாள அட்டை நகலை வைத்து தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகள் உள்பட அனைவரும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

ALSO READ: அடுத்த 15 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கிடையாது: தேவஸ்தானம்

10 முதல் 18 வயதிற்குட்பட்ட அய்யப்ப பக்தர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் தரிசனத்திற்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

தரிசனத்துக்காக வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் தரிசனத்திற்கான உடனடி முன் பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல்லில் மட்டும் இதற்காக 4 மையங்களில் முன் பதிவு நடைபெற்றுகிறது. தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு மூலம் தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30-ந்தேதி வரை 2,600 பக்தர்கள் உடனடி முன் பதிவு மூலம் தரிசனம் செய்து உள்ளனர். ஆன்லைன் முன் பதிவு மற்றும் உடனடி முன் பதிவு சேவைகள் கேரள காவல் துறை மூலம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பணம் செலுத்தி முன் பதிவு செய்ய தேவை இல்லை.

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் இலவசமாக முன் பதிவு செய்யும் பக்தர்கள், ஆன் லைன் மூலம் பணம் செலுத்தி அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களுக்கும் சேர்த்து முன் பதிவு செய்ய வசதி உள்ளது. அதற்கான முன் பதிவின் போது தரப்படும் ஆன் லைன் ரசீது நகலை காண்பித்து தரிசனத்திற்கு வரும் போது, பக்தர்கள் சன்னிதானத்தில் உள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் கொடுத்து முன் பதிவு செய்த பிரசாதங்களை பெற்றுக்கொள்ளலாம். இதனால் சன்னிதானத்தில் பிரசாதத்திற்காக பணம் செலுத்த காத்து நிற்கவேண்டிய நிலை தவிர்க்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது. 

ALSO READ: திருப்பதியில் முடி தானம் செய்யும் வழக்கம் எப்படி தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More