Home> India
Advertisement

தனி நபர் தொடர்பான விவாதங்கள் கூடாது- அருண் ஜேட்லி

தனி நபர் தொடர்பான விவாதங்கள் கூடாது- அருண் ஜேட்லி

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி இரு முறை கடிதம் எழுதிவிட்டார். மேலும் திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார்,  நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி வீழ்ச்சி அடைய ரகுராம் ராஜனே பொறுப்பு என்றும், நாட்டின் உயரிய பதவியில் இருந்து தனது அமெரிக்கா கிரீன் கார்டை புதுப்பித்துக் கொள்ள அடிக்கடி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். அவர் மனதளவில் இந்தியராக இல்லை. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி  அக்கடிதத்தில் குறிப்பிட்டுருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அருண்ஜேட்லி கூறியதாவது:

இந்தியப் பொருளாதாரத்தில் ரிசர்வ் வங்கியும் மற்றும் அதன் ஆளுநர் பதவியும் முக்கிய அங்கமாகும். எனவே அவர்கள் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் யார் கூறினாலும்  அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் கொள்கைகளை ஆதரிக்கவும், அவற்றை விமர்சிக்கவும் மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அந்த விமர்சனம் தனிநபர் மீதான விமர்சனமாக மாறிவிடக்கூடாது என்பது முக்கியம். ஏனெனில் தனி நபர் விமர்சனங்கள் பிரச்னையின் முடிவுக்கு கொண்டுவராது என்றார்.

ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு மத்திய அரசு வழங்குமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அருண் ஜேட்லி "இதுதொடர்பாக ஊடகங்களுடன் விவாதிக்க முடியாது" என்றும், மேலும் இது நிர்வாகம் தொடர்பானது என்று அவர் பதிலளித்தார்.

Read More