நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
இணை அமைச்சர்கள்
முன்னதாக உடல்நல குறைவு காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பதவியேற்ற அமைச்சர்களின் பெயர் பட்டியலில் இவர்கள் இருவரது பெயர் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓபி ரவிந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. எனினும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இருவருக்கு மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர் 1995-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவரது தந்தை கே. சுப்பிரமணியன் திருச்சியைச் சேர்ந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற ஜெய்சங்கர் சுப்பிரமணியன் 1977-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார்.
சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்தியாவின் தூதராக செயல்பட்டவர். அந்த காலகட்டத்தில் சீனா, அமெரிக்காவுடனான பல்வேறு பிரச்சனைகளை மிகவும் திறமையாக கையாண்டு பாராட்டுக்களைப் பெற்றவர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான போது அவரின் நன்மதிப்பை பெற்று 2015-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவியேற்றார். இந்நிலையில் தற்போது அவருடைய பதவிகாலம் முடிந்த பின்னர் அமைச்சரவையில் இடம் பெறச் செய்து ஜெய்சங்கருக்கு வாய்ப்பளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடி அமைச்சரவையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த நிர்மலா சீதாராமன் இம்முறையும் இடம் பிடித்துள்ளார். தமிழகத்தின் தென் பகுதியான மதுரையை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் 1959-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிறந்தவர்.
இவரின் தந்தை ரயில்வே துறையில் பணியாற்றி போது பணியிடமாற்றம் காரணமாக திருச்சிக்கு இடம் பெயர்ந்தனர். திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை முடித்த நிர்மலா, முதுகலை படிப்பை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் படித்தார்.
பின்னர், ஆந்திராவை சேர்ந்த டாக்டர் பிரகலாத் பிரபாகர் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்துக்கு குடியேறினார். அதன்பின்பு டெல்லியில் அவரது குடும்பம் குடியேறியது.